புதினங்களின் சங்கமம்

யாழ் கோண்டாவிலில் வர்த்தகரை வெட்டிக் கொன்ற ஆவா காவலி கைது!!

கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளரைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில்
இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கிளிநொச்சி பகுதியில் வைத்து இன்று (08)
கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா
கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே வன்முறைக் கும்பலின் தாக்குதலில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

அன்றுமாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன்
உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், இரும்பகத்துக்குள் அட்டூழியத்தில்
ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தது.

இரும்பகத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து உரிமையாளரின் தலையில் கும்பல்
தாக்கியிருந்தது. அதனால் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் 24 நாள்களின் பின்னர் அவர் கடந்த 30ஆம் திகதி இரவு உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் ஒளிப்படங்கள் மற்றும் சிசிரிவி காணொளிகள்
பொலிஸாரினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்ட இருவரும்
தலைமறைவாகியிருந்தனர்.

பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, தலைமறைவாகியிருந்த இருவரில் ஒருவரை
மானிப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.