மட்டக்களப்பில் கிறீஸ்தவ மதப்பிரிவு மீது கடும் தாக்குதல்!! பலர் படுகாயம் (Photos)
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பாசிக்குடா
சுனாமி வீட்டுத் திட்ட கிராமத்தில் நேற்று ஞாயிறு காலை வழிபாட்டிற்கு
சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐந்து பேர்
படுகாயமடைந்துள்ளனர்.
பிறேயா பிறேயர் ஹவுஸ் என்ற கிறிஸ்தவ மத பிரிவினர் மீது, அந்த
பகுதியிலுள்ள சைவ மக்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியளவில் வழிபாட்டிற்கு சென்றவர்களை வழிமறித்து கிராம
மக்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பிற்குமிடையில் கைகலப்பாக,
கிறிஸ்தவ சபையினர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் காயடைந்த நால்வர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர். கடுமையான பாதிப்பிற்குள்ளான யுவதியொருவர்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், தாக்குதல் நடத்திய கிராம மக்கள்
இருவரை கைது செய்துள்ளனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில்
முற்படுத்தப்படவுள்ளனர்.
பின்னணி
அந்த கிராமத்திலுள்ள வீடொன்றில் நீண்டகாலமாக இவர்கள் வழிபாட்டில்
ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதமளவிலிருந்து அந்த மத
பிரிவினருக்கும், கிராமத்திலுள்ள பெரும்பான்மை சைவ மக்களிற்குமிடையில்
முரண்பாடு ஏற்பட்டது. கிறிஸ்தவ மதப்பிரிவை அங்கு வழிபாட்டில் ஈடுபட கூடாது
என சைவ மக்கள் தடுத்து வந்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது. பின்னர், கிராம
அலுவலர் தலையிட்டு, அந்த வீட்டில் வழிபாடு நடத்த முடியாது, கிராமத்தின்
ஒதுக்குப்புறமாக வழிபாட்டில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அந்த கிளிஸ்தவ மதக்குழு
முறையிட்டிருந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்திய மனித உரிமைகள்
ஆணைக்குழு, அவர்களின் வழிபாட்டுரிமையை தடுக்க முடியாது என
தீர்ப்பளித்திருந்தது.
இதையடுத்து அந்த இடத்தில் மீளவும் வழிபாட்டை நடத்தி வந்தனர். உயிர்த்த
ஞர்யிறு குண்டுவெடிப்பையடுத்து, வழிபாடுகள் நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த
8ம் திகதி ஞாயிற்றுகிழமை மீளவும் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

