செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 231 என்புக்கூடுகள் மீட்பு!! 2ம் கட்ட அகழ்வுப் பணி நிறைவு!!
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, சுமார் 1500 சதுர அடி நிலப்பரப்பில் இருந்து 231 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது , அகழ்வாய்த்தளம் – 1 மற்றும் அகழ்வாய்வு தளம் – 02 என அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது அகழ்வாய்த்தளம் – 01 புதைகுழியில் கட்டம் கட்டமாக 54 நாட்களாக , அண்ணளவாக 30 அடி அகலமும் 50 அடி நீளமும் , 05 அடி ஆழத்திலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது குறித்த புதைகுழியில் இருந்து 231 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகவும் குவியல் ஆகவும், அமர்ந்த நிலையிலும் என சிறுவர் , சிசுக்கள் உள்ளிட்டவர்களின் என்புக்கூடுகளும் அடையாளம் கண்டு மீட்கப்பட்டிருந்தன.
அதேவேளை அகழ்வாய்வுத் தளம் – 02 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 09 என்புக்கூடுகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


