புதினங்களின் சங்கமம்

யாழில் குடும்பப் பிரச்சனையை தீர்க்கச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது துரத்தித் துரத்தி தாக்குதல்!!

யாழில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தாக்குதலை நடத்திய சகோதரர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இது தொடர்பில் டேலும் தெரிய வருவதாவது,

உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை செய்வதற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது சகோதரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம் திருநகரில் இடம்பெற்றுள்ளது.

அதனையடுத்து திருநகருக்கு பெருமளவு பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சகோதர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர சபை ஊழியர். ஒருவருக்கு கஞ்சா போதைப்பொருள் விற்பனை தொடர்பில் 3 வழக்குகள் நீதிமன்றில் நடைபெறுகின்றன என்றும் பொலிஸார் கூறினர்.

திருநகரில் நேற்றிரவு குடும்ப உறவினர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் துவிச்சக்கர வண்டி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுக்கச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.