முல்லைத்தீவில் 3 பாடசாலை மாணவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டது எதற்காக?
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் பாடசாலை நேரம் வகுப்பு ஒன்றுக்குள் புகுந்து சக மாணவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் புதிதாக உயர்தரம் பயில்வதற்காக சேர்ந்த மாணவர்கள் மூவர் இன்னொரு வகுப்புக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரும்புக் கம்பியுடன் நுழைந்து அங்கு கற்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவரை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர்.
சம்பவத்தில் மாணவன் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாடசாலைச் சூழலில் குழுமி எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
பாதிக்கப்பட்ட மாணவனை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட பொலிஸார் கல்லூரிக்குச் சென்று சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
அதன் பின்னர் இன்று அவர்கள் மூவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றிற்கு இன்று தெரிவித்தனர்.
போர்க்காலத்திலும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் கட்டுக்கோப்புடன் பெருமளவான புத்திஜீவிகளை உருவாக்கிய புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் இவ்வாறான முன்னுதாரணங்கள் நிகழ்வது மிகுந்த வேதனை தருவதாக ஊர் மக்கள் கவலை தெரிக்கின்றனர்.

