புதினங்களின் சங்கமம்

வடக்கில் கள்ள உறுதி எழுதிய லோயர்மாருக்கு ஆப்பு இறுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!!

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத்திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களங்களுடன் விரைவில் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்கள் உறுதியளித்துள்ளார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.06.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 160 ஆண்டுகால வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்களுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து இக்கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார்.

இக்கலந்துரையாடலில் வெளிப்படுத்தல் உறுதி ஊடான மோசடிகள் தொடர்பில் ஆளுநர் பல முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினார். ‘வெளிப்படுத்தல் உறுதி ஊடான காணிப் பதிவுகள் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. மாறாக, அதன் பெயரால் அரங்கேறும் மிகப்பெரிய மோசடிகளைத் தடுத்து நிறுத்த வேண்டியதே எமது தலையாய கடமையாகும். வலி. வடக்கில் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் காணிகள் கூட இவ்வாறு போலி உறுதிகள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளன,’ என ஆளுநர் கவலை வெளியிட்டார்.

மேலும், ‘கடந்த ஆட்சியின் போது காணி மோசடிகளுடன் தொடர்புடைய சட்டத்தரணிகளைக் கைது செய்வதற்குப் பொலிஸார் சட்டமா அதிபரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடான வழிகாட்டல் வழங்கப்பட்டிருந்தது. இவ்விடயத்தை நான் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, தற்போது அந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. போலி உறுதிகளை எழுதுவதற்குப் பதிவாளர் திணைக்களத்திலுள்ள சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்து, காணிகளின் மூல ஆவணங்களான தோம்புகளை அழித்திருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையாகும். எனவே, இவ்வாறான மோசடிகளைத் தடுப்பதற்கான உறுதியான பொறிமுறையை நாம் விரைவாக உருவாக்க வேண்டும்,’ என ஆளுநர் வலியுறுத்தினார்.

இதன்போது, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் மேலதிக மாவட்டச் செயலாளர்கள் (காணி) தமது மாவட்டங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்களை எடுத்துரைத்தனர். ஒரு காணி அரச காணியா அல்லது தனியார் காணியா என்பதை உறுதிப்படுத்துவதற்குப் பதிவாளர் திணைக்களம் 14 நாட்கள் அவகாசம் மட்டுமே வழங்குவதாகவும், குறித்த காலத்துக்குள் பதிலளிப்பது சவாலானது எனவும் சுட்டிக்காட்டினர். மேலும், போலிப் பெயர்களில் உறுதிகள் எழுதப்படுவதால் சிக்கல்கள் மேலெழுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண காணி ஆணையாளர், அரச காணியொன்று வெளிப்படுத்தல் உறுதி மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் அதனை இரத்துச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய பதிவாளர் நாயகம், ‘2022ஆம் ஆண்டு சுற்றறிக்கையின்படி அரச காணியா என்பதை உறுதிப்படுத்தப் பிரதேச செயலாளர்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேவையேற்படின் மேலதிக கால நீடிப்பையும் கோர முடியும். பிரதேச செயலகக் காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டங்களில் காணி உரித்துத் திணைக்கள அதிகாரிகளையும் இணைத்துக்கொள்வதன் மூலம் இதற்கான தீர்வுகளை இலகுவாகப் பெறலாம், என்றார்.

எதிர்காலத்தில் வெளிப்படுத்தல் உறுதி மூலம் காணிகள் பதிவு செய்யப்படும் போது, அதனைப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதைக் கட்டாயமாக்கும் சரத்து சட்டத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என ஆளுநர் முன்மொழிந்தார். மேலும், இக்கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி க.அரியநாயகம் அவர்கள், வெளிப்படுத்தல் உறுதிகளைப் பதிவு செய்யும்போது காணியின் வரைபடம் மற்றும் நான்கு எல்லைகளிலும் உள்ளவர்களிடமிருந்தான சத்தியக்கடதாசி ஆகியவற்றைக் கட்டாயமாக்குதல் உள்ளிட்ட சட்டத்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிகள், காணி மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தரவுகளைச் சமர்ப்பித்தனர்:

2023: 16 வழக்குகள் பதிவு (15 நிறைவுற்றன)

2024: 31 வழக்குகள் பதிவு (25 நிறைவு, 6 விசாரணை நிலுவை)

2025: 20 வழக்குகள் பதிவு (6 நிறைவு, 14 விசாரணை நிலுவை)

2026 (மே வரை): 9 வழக்குகள் பதிவு (1 நிறைவு, 8 விசாரணை நிலுவை)

இந்த மோசடிகளுடன் தொடர்புடைய 9 பிரசித்த நொத்தாரிசுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், காணி ஆவணங்கள் தொடர்பான விசேட பயிற்சிகளைத் தமது புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக ஆளுநரும் பதிவாளர் நாயகமும் உறுதியளித்தனர்.

2022ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 3,839 வெளிப்படுத்தல் உறுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் தெரிவித்தார். (யாழ்ப்பாணம் – 1874, மன்னார் – 958, கிளிநொச்சி – 570, முல்லைத்தீவு – 321, வவுனியா – 116).

காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகத்தின் ஊடாக வழங்கப்படும் ‘காணாமல் போனமை உறுதிப்படுத்தல் சான்றிதழ்’ வழங்கும் நடைமுறையைத் துரிதப்படுத்துமாறும், அதன் சட்டரீதியான அங்கீகாரம் மற்றும் காலாவதித் திகதி தொடர்பில் காணப்படும் குறைபாடுகளை நீக்குமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். இந்தச் சான்றிதழ்களைக் கொண்டுள்ள குடும்பங்கள் நிதி நன்மைகளைப் பெற முடியாமல் உள்ளதை ஓ.எம்.பி.இன் யாழ். இணைப்பாளர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் நீதி அமைச்சுடன் மேலதிக பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகப் பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், நொத்தாரிசுகளுக்கான சுற்றறிக்கைகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கைக்கு, தற்போது மும்மொழியிலும் வெளியிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பதிலளிக்கப்பட்டது. மேலும், பிறப்பு/இறப்புப் பதிவாளர் நியமனங்களில் காணப்படும் பாரபட்சமான நடைமுறைகள் (உ-ம்: 65 வயது ஓய்வு எல்லை, விதவை/தபுதாரர் தொடர்பான விதிகள்) திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு, சேவைப் பிரமாணக் குறிப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் உறுதியளித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தினுள் பதிவாளர் திணைக்களத்தின் தேவைகள் மற்றும் ஆளணி பரவலாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர்கள் (காணி), வடக்கு மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம், முன்னாள் மாவட்ட நீதிபதி, வடக்கு மாகாண காணி ஆணையாளர், யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிகள் மற்றும் 5 மாவட்டங்களினதும் மேலதிக மாவட்டப் பதிவாளர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
24.06.2026

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x