புதினங்களின் சங்கமம்

சி.ஐ.டி. காவலில் நிர்வாணமாக்கி எனக்கு கொடூர சித்திரவதைகள்! பலரின் முன் மலத் துவாரத்தினுள்… முன்னாள் அரச புலனாய்வுத் துறைப் பணிப்பாளர் சுரேஷ் சலே கதறல்!!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனக்கு இழைக்கப்படும் சித்திரவதைகளுக்கு எதிராகச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“முன்னாள் அரச புலனாய்வுத் துறைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, நீதிமன்ற உத்தரவின்றி ஜனாதிபதியின் தனிப்பட்ட உத்தரவின் பேரில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பழிவாங்கலாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைதுக்கு எதிரான வழக்கு தற்போது நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

இந்நிலைமையில், சி.ஐ.டி. காவலில் தமக்கு இழைக்கப்படும் அநாகரிகமான சித்திரவதைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு முதல் அவர் உணவு, நீர் மற்றும் மருந்துகளை முற்றாக மறுத்து இந்த அபாயகரமான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு அவருக்கு ஒரு கரண்டி சோறும் முள்ளங்கிச் சாறும் மாத்திரமே, ஒரு பழைய பத்திரிகைத் தாளில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. அதுவும் நிலத்தில் கொட்டியுள்ளது. இதனால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அவர், ‘தன்னை மிருகங்களை விட மோசமாக நடத்துகின்றார்கள்’ என நேற்றுக் காலை தன்னைத் தேடிவந்த மகனிடம் அழுது புலம்பியுள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தி ல் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய தடயவியல் மருத்துவ அறிக்கையின்படி, சுரேஷ் சலே கடுமையான பாலியல் மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. கைது செய்யப்பட்டு 7 நாள்களின் பின், ஏனைய 13 கைதிகள் முன்னிலையில் அவரது ஆடைகள் அனைத்தும் களையப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, மலக்குடல் பகுதி அதிகாரியொருவரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அவர் 6X4 அடி அளவுள்ள மிகச்சிறிய அறையில் அடைக்கப்பட்டு, 40 நாள்கள் வெறும் தரையிலேயே தூங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது முகத்திற்கு நேரே 24 மணித்தியாலங்களும் பிரகாசமான மின்விளக்கு ஒளிரவிடப்படுவதால் அவரால் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றார். அத்துடன், கடுமையான புரத மற்றும் விற்றமின் குறைபாடுகளாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இராணுவத்தினரே நடத்தினர்’ என்ற பொய்ப் பிரசாரத்தை தற்போதைய திசைகாட்டி அரசால் நிரூபிக்க முடியவில்லை. இதனால், சுரேஷ் சலேவைத் தற்கொலைக்குத் தூண்டி, அனைத்து இரகசியங்களையும் அவருடன் புதைத்துவிட அரசு முயல்கின்றது. சலேக்கு தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் அதிகம் உள்ளது என்று கடந்த ஏப்ரல் 29ஆம் திகதியே மருத்துவர்கள் எச்சரித்திருந்தும், அரசு வேண்டுமென்றே அவரைச் சித்திரவதைக்கூடத்திலேயே வைத்துள்ளது.

எனவே, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களால் பாராட்டப்பட்ட சிறந்த இராணுவ வீரரான சுரேஷ் சலேவை மரணத்தில் இருந்து காப்பாற்ற, நாட்டு மக்கள் அனைவரும் சமூக ஊடகங்கள் வாயிலாக உடனடியாகக் குரல் கொடுக்க வேண்டும்.” – என்றார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x