யாழ் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு எடுத்தது நடிகை ரம்பாவின் கணவன் புலம்பெயர் தமிழன் இந்திரகுமார்!!
யாழ்.கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைந்த பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்து தமிழனுக்கே குத்தகைக்கு வழங்கி பணமீட்டும் தந்திரம் சிங்கள அரசிடம் மட்டுமே இருக்கிறது. காணி உரிமையாளர்கள் தொடர்பில் சிங்கள அரசும் கவனத்தில் எடுக்கவில்லை, அதனை குத்தகைக்கு எடுக்கும் புலம்பெயர் தமிழனும் கவனத்தில் எடுக்கவில்லை.
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் மக்களின் காணிகளை அவர்களுக்கே தெரியாமல் சுவீகரிக்க முடியுமா?.
யாழ்.காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) சுமார் 50 வருடங்களுக்கு கனடா வாழ் புலம்பெயர் தமிழருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இதன் முதலீட்டு மதிப்பு அண்ணளவாக 5000 பில்லியன் ரூபாய்கள். கனேடிய முதலீட்டாளருடன் ( புலம்பெயர் யாழ்ப்பாண தமிழரும், நடிகை ரம்பாவின் கணவருமான இந்திரகுமார் – பத்மநாதன்) இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இதனை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யவுள்ளது. என்ன கொடுமை என்றால் தமிழனுடைய காணியை சுவீகரித்து அரசு தமிழனுக்கே குத்தகைக்கு வழங்குகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (16) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தலைமையில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவது என்பது காணி உரிமையாளர்களான இந்த நாட்டில் வாழும் ஒரு இன மக்களாகிய தமிழர்களை கருத்தில் எடுக்கவில்லை என்பது நன்கு தெரிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதி அலுவலகத்தின் தேசிய பாதுகாப்பு பிரதம ஆலோசகரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஜனாதிபதி மாளிகையை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஐனாதிபதி கூட காணி உரிமையாளர் தொடர்பில் கருத்தில் எடுக்கவில்லை.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி மாளிகையின் நிர்மாணப் பணிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இது 2010-2015 ஐந்தாண்டுகளுக்குள் இருந்தது. எனினும் இந்த ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்கும் போது புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதனையடுத்து கடந்த காலத்தில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த மாளிகை வளாகம் 30 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது,
அதில் 12 ஏக்கரில் இந்தக் கட்டிடத் தொகுதிகள் அமைந்துள்ளன. எஞ்சிய நிலம் அப்பகுதி மக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்டதுடன், அரசுக்கு சொந்தமான 12 ஏக்கரை SLIIT நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட முதலில் முடிவு செய்யப்பட்டது.
மக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்ட எஞ்சிய 17 ஏக்கர் காணியை வருமானத்தின் அடிப்படையில் SLIIT நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. மக்கள் தொடர்பில் எந்தவித கரிசனையும் இல்லாமல் இடம்பெற்ற இந்த நடவடிக்கையைப் பார்த்தால் இனிவரும் காலம் ஏனைய விடுவிக்கப்படாத மக்களின் காணிகளையும் சுவீகரித்து குத்தகைக்கு வழங்குவார்கள் என்ற நிதர்சனத்தை இந்த சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) இந்த ஜனாதிபதி மாளிகையின் பணிகளை விரைவாக முடித்து முழு அளவிலான தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றும் என நம்புகிறது.
Northern Uni. IT பல்கலைக்கழகம்
அதேசமயம் இந்த தகவல் தொழில்நுட்பம் பல்கலைக்கழகம் northern Uni. IT பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும். ஆண்டுதோறும் சுமார் 1500 மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கும் திறன் கொண்டது.
மேலும், இந்த தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கட்டப்பட்டதன் பின்னர், வடக்கிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு தகவல் தொழில்நுட்பம் படிக்க கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


