யாழ்ப்பாணத்தில் மாற்றுத்திறனாளி ஊடகவியலாளர் ஒருவர் கொரோனாவால் மரணம்! (Photos)
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
சிறுவயது முதல் உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் நடக்கமுடியாத நிலையை எதிர்கொண்ட போதிலும் செய்தியாளராக யாழ்ப்பாணத்தின் சில பத்திரிகைகளுக்கு செய்திப் பணியாற்றியுள்ளார்.
எழுத்தாளராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள அவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தீவிர செயற்பாட்டாளராக செயற்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சில போராட்டங்களையும் ஒருங்கிணைத்திருந்தார்.
சில வருடங்களுக்கு முன்னார் தென்மராட்சியில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் நினைவு வணக்க நிகழ்வு ஒன்றின்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனான் மதிப்பளிக்கப்பட்டிருந்தார்.
நேற்று தன்னுடைய முக நூலில் பதிவிட்டிருந்த அவர்,
கடந்த ஐந்து நாட்களாக இலேசான தலைவலி இருமலுடன் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தேன். சற்று தேறிவரும் நிலையில் இன்று அன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குணமடைந்த பின்னர் தடையின்றி எனது பணிகள் தொடரும். அதுவரை காத்திருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இருந்தபோதிலும் மூச்சுத்திணறலுக்கு உட்பட்டிருந்த அவர் உயிரிழந்ததாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.




