புதினங்களின் சங்கமம்

வடமராட்சியில் பொலிஸ் அதிகாரியை மோதிவிட்டு தப்பிச் சென்ற சட்டவிரோத கள்ளமண் டிப்பர்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது வாகனம் மோதியதாகவும் அதனால் பொலிஸ் அதிகாரியின் கால் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் அங்கு சென்றதாகவும் அங்கு டிப்பர் வாகனங்கள், கன்ரர் வாகனங்கள் மணலுடன் வந்ததாகவும் அவற்றை தடுக்க முற்பட்டபோது கன்ரர் வாகனம் பொலிஸ் அதிகாரி மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.