Uncategorizedபுதினங்களின் சங்கமம்

கைலாசா நாட்டில் கொரோனா – நித்யானந்தா கூறுவது என்ன?

கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என்றும், பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார் எனவும் நித்யானந்தா டுவிட்டரில் கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடத்தல் வழக்கில் குஜராத் பொலிஸார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரியவந்தது. ஈக்வடார் அருகே ´கைலாசா´ என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கைலாசா நாட்டில் குடியேற 40 இலட்சம் பேர் ஒன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கிடையே பாலியல் வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச பொலிஸ் உதவியை பொலிஸார் நாடினர். இதை அடுத்து புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்யானந்தா தனது ´டுவிட்டர்´ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “கொரோனா வைரஸால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் என்னை தாக்காது. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.