பதுளையில் மரத்தில் தானாக தோன்றிய விநாயகர் பெருமான்!!! பக்தி மயத்தில் மக்கள்!! (Photos)
பதுளையில் மரத்தில் தானாக தோன்றி பக்தர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த விநாயகர் பெருமான்!!!
பேராவலுடன் தர்சிக்க தினம் படையெடுக்கும் பௌத்த ,இந்துமத மக்கள்!!!
ஹாலிஎல அந்துட்டுவாவெல பாதையில் இரண்டு கிலோ மீற்றர் செல்லும் போது குயின்ஸ்டவுன் தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தின் கீழ்ப் பிரிவில் அமைந்துள்ள கிருபானந்தவாரியார் தமிழ் வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மே மரம் (சிங்களத்தில் இம்மரத்தை மே கஹா என்று அழைக்கின்றனர்) ஒன்றில் சுயம்பாக பிள்ளையார் வடிவம் ஒன்று தோன்றியுள்ளதை கடந்த ஆகஸ்ட் மாதம் 25ந் திகதி அவ்வூர் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் தீச்சட்டிக் கரக ஊர்வலம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தீச்சட்டிக் கரகத்தை ஏந்தி வந்த பக்தரோடு வந்த முதியவரான சிவசாமி என்பவர் இவ்வடிவத்தைக் கண்டுள்ளார்.
இவர் ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தியது தொடக்கம் மர வேரில் உள்ள பிள்ளையார் வடிவத்தை வழிபட அவ்வூர் மக்களும் கிராமத்தில் உள்ள சிங்கள மக்களும் வெளி இடங்களில் இருந்து வரும் பக்தர்களும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கிருபானந்தவாரியார் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர் வி. நித்தியானந்தன் தெரிவித்தார்.
இச் சுயம்புப் பிள்ளையாரின் வரலாறு தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர் பிரித்தானியர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து அழகுக்காக வளர்ப்பதற்காக இம்மரம் கொண்டு வரப்பட்டதாகவும் இம்மரத்தில் அழகிய சிவப்பு நிறப் பூக்களும் பூக்கின்றன. இப்பூவை மே மலர் என அழைக்கின்றனர். இம் மரத்தி;ல் புடலங்காய் வடிவிலான நீண்ட காய்களும் காய்ப்பதோடு அக்காய்கள் காய்ந்த பின் அவ்வூர் மக்கள் அவற்றை விறகிற்காக பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையிலேயே கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது சுயம்பாக தோன்றிய பிள்ளையாரின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்வூர் மக்களால் அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு வழிபாட்டிடமாக மாற்றப்பட்டது. அப் பிள்ளையாரை பூமரத்து பிள்ளையார் என பெயர்சூட்டி ஊர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். தற்போது தினமும் இரு வேளைகள் அவ்வூர் பொது மக்களால் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. பாடசாலை மாணவர்கள் இள வயதினரும் நகர்ப்புறங்களில் இருந்து வருவோரும் ஆர்வத்தோடும், பக்தியோடும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இம் மரத்தை சுற்றியுள்ள பகுதியில் ஒரு வித்தியாசமான தெய்வீக தன்மையும் ஒளியும் தோன்றியுள்ளதாக தாம் உணர்வதாகவும் கடந்த 40 வருட காலமாக இங்கு வசிக்கும் நான் இது போன்ற அதிசயத்தை என் வாழ்நாளில் கண்ட முதல் தடவை இது எனவும் குறிப்பிட்டதோடு இம் மரத்தைச் சுற்றியுள்ள பல வேர்ப்பகுதிகளில் யானையின் தலைப்பகுதி தும்பிக்கை போன்ற வடிவங்கள் அமையப்பெற்று காட்சியளிப்பதாகவும், இது ஒரு கலியுக அற்புதம் எனவும் குறிப்பிட்டார்.





