அமெரிக்காவிலிருந்து 2 பிள்ளைகளுடன் லண்டன் சென்று தலைமறைவான இலங்கைக் குடும்பப் பெண் நிஷிகா!! கணவன் பொலிசாரிடம் முறையிட்டது ஏன்?
அமெரிக்காவிலிருந்து பிள்ளைகளைக் கடத்தி வந்து பிரித்தானியாவில் தலைமறைவாக உள்ள இலங்கையைச் சேர்ந்த தாய் தேடப்பட்டு வருகிறார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 34 வயதுடைய பிரித்தானிய பிரஜையான நிஷிகா சமரதுங்க என்ற பெண், தனது இரண்டு சிறு பிள்ளைகளையும் அமெரிக்காவில் வசிக்கும் அவர்களின் தந்தையிடமிருந்து கடத்திச் சென்று, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் தலைமறைவாக உள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தைகள் இருவரும் தற்சமயம் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கக் கூடுமென, அமெரிக்க நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 43 வயதான தந்தை பென் பேயர், அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் டென்வர் நகருக்கு அருகில் வசித்து வருகிறார்.
இவர்களின் ஐந்து வயதுடைய பிளேயன் மற்றும் மூன்று வயதுடைய நதானியேல் ஆகிய இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் பிறந்து, தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். பெற்றோரின் விவாகரத்துக்குப் பின்னர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் லண்டனில் இருக்கும் தமது தாயைச் சந்திப்பதற்காக பிள்ளைகள் இருவரும் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனினும், மார்ச் 29ஆம் திகதி லண்டன் விமான நிலையத்தில் வைத்து பிள்ளைகளை மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டிய கடப்பாட்டைத் தாய் நிஷிகா மீறியுள்ளார். அன்றிலிருந்து இன்று வரை தாயும் இரு பிள்ளைகளும் எங்கு இருக்கிறார்கள் என்பது கண்டறியப்படவில்லை.
பிள்ளைகளை மீட்பதற்காக தந்தை பென் பேயர் தற்போது லண்டன் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். காணாமல் போயுள்ள இரண்டு சிறுவர்களும் பாடசாலைக்கோ அல்லது முன்பள்ளிக்கோ அனுப்பப்படவில்லை என்றும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தந்தையின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
காணாமல் போயுள்ள இரு பிள்ளைகளும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிப்புடையவர்கள். அவர்களின் நாளாந்த பழக்கவழக்கங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அவர்களின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கும் எனத் தந்தை கவலை தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சிறுவர்களைக் கண்டறிவதற்காக குடும்பத்தினரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவதற்கு லண்டன் உயர் நீதிமன்றம் விசேட அனுமதியை வழங்கியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு திருமணமான இந்தத் தம்பதியினரின் உறவு, 2024இல் முறிவடைந்தது. பிள்ளைகளை லண்டனுக்கு நிரந்தரமாக அழைத்துச் செல்ல நிஷிகா மேற்கொண்ட சட்ட முயற்சிகளை கொலராடோ நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபரில் தந்தைக்கு முதன்மைப் பராமரிப்பு உரிமையை நீதிமன்றம் வழங்கி இருந்தது.
தாயான நிஷிகா திட்டமிட்டே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி பிள்ளைகளைத் தடுத்து வைத்துள்ளதன் மூலம் பிள்ளைகளின் உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதுகாப்புக்கு அவர் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார் என, கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க கொலராடோ நீதிமன்றம் எச்சரித்தது.
லண்டன் உயர் நீதிமன்றம் நிஷிகாவின் இருப்பிடத்தைக் கண்டறியும் நோக்கில் ஜே.பி. மோர்கன் சேஸ், எச்.எஸ்.பி.சி போன்ற வங்கிகள், ஜேம்ஸ் வாட்டர் நீர் நிறுவனம் மற்றும் பிரித்தானிய தேசிய சுகாதார சேவை போன்றவற்றுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும், இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
தனது பிள்ளைகளின் நிலை குறித்து தந்தையான பென் பேயர் கருத்துத் தெரிவிக்கையில்,
“எனது திருமணம் முறிவடைந்தது எனது வாழ்க்கையின் கடினமான காலம்தான். ஆனால், நிஷிகா எனது பிள்ளைகளைக் கடத்திச் சென்று எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் மறைத்து வைப்பார் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எமது இரு பிள்ளைகளும் ஆட்டிசம் குறைபாடு உள்ளதால், இந்தத் திடீர் மாற்றம் அவர்களின் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும். தயவுசெய்து எனது பிள்ளைகளை என்னிடம் திருப்பி ஒப்படைக்குமாறும், அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் உடனடியாக உதவ வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

