யாழில் மின்சாரசபையின் பொறுப்பற்ற செயல்!! 9 மாத குழந்தையின் தாயான நேசமலர் மின்சாரம் தாக்கிப் பலி!! Photos
யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயான தினேஸ் நேசமலர் எனும் குடும்பப் பெண் மின்சாரம் தாக்கிப் பலியாகியுள்ளார், வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்ள ஒழுங்கையில் காணப்படும் கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் 3 பேஸ் மின்சார இணைப்பு அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகத் தெரியவருகின்றது. இவ்வாறான நிலையில் குறித்த குடும்பப் பெண் தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை மீட்பதற்காக இரும்பு கம்பி ஒன்றை கிணற்றுக்குள் செலுத்தி கோழிக் குஞ்சை மேலே துாக்கும் போது அக் கம்பி கூட்டுறவு நிறுவனத்திற்கு செல்லும் 3 பேஸ் மின் இணைப்புக்கு அருகில் சென்றதால் மின்சாரம் கம்ப ஊடாகப் பாய்ந்து குறித்த குடும்பப் பெண் மின்சாரத்தால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
குறித்த மின்சார இணைப்பு கம்பிகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகவும் எதிர்ப் பக்க காணிகள் உள்ள மிக உயர்ந்த பனைகள் தற்போது வேகமாக வீசிவரும் காற்றின் காரணமாக முறிந்து விழுந்தால் குறித்த மின் கம்பிகள் அப்பகுதி வீடுகளின் மேல் விழுந்து பெருமளவு உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சித் தகவல்களை கூறுகின்றார்கள்.
இச் சம்பவத்தை அடுத்து குறித்த பகுதி மக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளார்கள். சாவகச்சேரிப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக அக்கறை செலுத்தி தமக்கான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.





