மாதகலில் காலையில் திருடியவர் யாழ்.நகரில் மாலை சிக்கினார்
மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றை உடைத்து சுமார் 15 பவுண் தங்க நகைகளைத் திருடியவர் என யாழ்ப்பாண நகரில் வைத்து கைது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து திருட்டுப் போன நகைகள் சிலவும் திருட்டு நகை ஒன்றை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து எடுத்த 37 ஆயிரத்து 500 ரூபா பணமும் மீட்கப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாதகல் நாவலர் வீதியில் அமைந்துள்ள வீடொன்று நேற்றுக்காலை உடைக்கப்பட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயிருந்தன. வீட்டிலுள்ளவர்கள் ஆலயத்துக்குச் சென்றிருந்த போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதேவேளை, யாழ்ப்பாணம் நகரில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய ஒருவரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மாதகல் பகுதியில் திருடபட்ட நகைகளை அடகுவைக்க யாழ்ப்பாண நகருக்கு வந்ததாக தெரிவித்த சந்தேகநபர், திருட்டு நகைகளின் ஒரு பகுதியை பொலிஸாரிடம் வழங்கினார்.
அத்துடன், சுமார் ஒரு பவுண் நிறையுடைய நகையை யாழ்ப்பாணம் நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்துப் பெற்றுக்கொண்ட 37 ஆயிரத்து 500 ரூபா பணமும் பற்றுச்சீட்டும் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயக்கவின் கட்டுப்பாட்டிலுள்ள சிறப்புக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் சந்தேகநபர் இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.