புதினங்களின் சங்கமம்

வவுணதீவில் பொலிஸார் வெட்டியும் சுட்டும் படுகொலை; பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது.!

2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான ஒரு பொலிஸ் பரிசோதகர் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை, ஜூலை 21) கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான கணேஸ் தினேஸ் (28, கல்முனை) மற்றும் வல்பிட்ட கமகே நிரோசன் இந்திக்க பிரசன்ன (35, காலி) ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். அவர்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். தமிழ் அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

உண்மை வெளிச்சத்திற்கு வந்த வழி:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போதுதான், வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தாக்குதல்களைத் திசைதிருப்பி, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது பழி சுமத்துவதற்காகப் போலியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகள் முன்னின்று செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, ஒரு மோட்டார் சைக்கிள், ஜக்கெட் சம்பவ இடத்திற்கு அருகே மறைத்து வைக்கப்பட்டு, அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்தது.

படுகொலைச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை மூடிமறைத்து, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றம் சுமத்தப்பட்டதை பொலிஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவரும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கைது, வவுணதீவு இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

May be an image of 1 person and rhinocerosMay be an image of 7 people