புதினங்களின் சங்கமம்

கோத்தா மாட்டுப்படுவாரா? யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலி்த், குகன்!! CID விசாரணைக்கு உத்தரவு!!

லலித் மற்றும் குகன் காணாமல் போனது குறித்து சிஐடி விசாரணை நடத்தும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (08) நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், இவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான உண்மைகள் 2011 டிசம்பர் 12 ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு எண். பி 669/2011 இன் கீழ் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான 17 சந்தர்ப்பங்களில் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இறுதியாக வழக்கு 2014 அக்டோபர் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாததால், இது தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு பதில் பொலிஸ் மா அதிபர்  2025 ஜூன் 3 ஆம் திகது சிஐடிக்கு தேவையான உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பின்னணி

2011 டிசம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரு அரசியல் செயற்பாட்டாளர்கள். மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து, பின்னர் முன்னணி சோசலிச கட்சி என்று அறியப்பட்ட ஒரு பிரிவுடன் அவர்கள் இணைந்திருந்தனர். இரண்டு இளைஞர்களும் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி இறுதியாக காணப்பட்டனர். போரினால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். காணாமல் போனோர் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக லலித் நீண்டகாலமாக பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தார்.

May be an image of 7 people

டிசம்பர் 9ஆம் திகதி மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் ஆவரங்காலில் உள்ள குகனின் வீட்டிலிருந்து இருவரும் கடைசியாக வெளியேறியதாக ஊடகவியலாளர் ஷாலிகா விமலசேன குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. குகனின் மனைவி டிசம்பர் 14 அன்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தனது கணவரின் மோட்டார் சைக்கிள் காணப்பட்டதை கண்டுள்ளார். எனினும், அந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து பொலிஸாரும் கிராம மக்களும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். டிசம்பர் 13ஆம் திகதி கோப்பாய் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கோப்பாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக குகனின் மனைவிக்கு பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், 9ஆம் திகதி அதைப் பார்த்ததாக அப்பகுதி மக்கள் உள்ளூர் கிராம உத்தியோகத்தரிடம் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலிக்கு  அருகில் வான் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த குழுவொன்று லலித் மற்றும் குகன் ஆகியோரை தடுத்து நிறுத்தியதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மேலதிக விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஒருவேளை குற்றவாளிகளை அறிந்திருந்தாலும், நேரில் கண்ட சாட்சிகள் அவர்களை குறிப்பிடுவதற்கு பயந்து முன்வராமல் இருந்திருக்கலாம்.

அவிசாவளையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த லலித், நீண்டகாலமாக மக்கள் விடுதலை முன்னணியில் முழுநேர அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளார். அவருடன் காணாமல் போன குகன் முருகானந்தனும் அரசியல் செயற்பாட்டாளரும் ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார். குகன் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார். ஆனால் 1999 ஆம் ஆண்டில் அந்தக் குழுவிலிருந்து வெளியேறினார்.

May be an image of 7 people and people smiling

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கம்பஹாவில் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமாக உள்ள வருண தீப்தி ராஜபக்ஷ, டிசம்பர் 9, 2021 அன்று பேஸ்புக்கில் இது குறித்துப் பதிவிட்டபோது இந்த காணாமல் போன விவகாரம் பரவலான கவனத்தைப் பெற்றது. அவர் இவ்வாறு எழுதியிருந்தார் –

லலித் காணாமல் போன சில நாட்களுக்குப் பின்னர், அவரது வாழ்க்கை குறித்து நான் பாரிய நிச்சயமற்ற தன்மையை உணர்ந்தேன். அது என் மனதை கனக்கச் செய்தது. அந்த நேரத்தில், இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர் நண்பர்கள், தலைமறைவாக இருந்து, உதுல் பிரேமரத்னவுக்கும் (வழக்கறிஞரும் ஆர்வலருமான) எனக்கும், லலித் மற்றும் குகன்  எங்கே அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அவ்வப்போது தகவல் அளித்தனர். அந்தத் தகவல் வருத்தமளிப்பதாக இருந்தாலும், லலித் மற்றும் குகன் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உதுலையும் என்னையும் எங்களுக்குத் தெரிந்த பல்வேறு அமைப்புகளையும் தனிநபர்களையும் தொடர்பு கொள்ளத் தூண்டியது. ஆளுநராகவும், பின்னர் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகித்த ராஜித் கீர்த்தி தென்னகோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார்.”

2009 டிசம்பர் 15 அன்று, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு இவ்வாறு கூறினார்: “லலித்குமாரும் குகன் முருகானந்தனும் காணாமல் போகவில்லை; அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படவில்லை. அவர்கள் விரைவில் பொலிஸ் அல்லது இராணுவத்தால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். எனினும் உறுதியளித்தபடி மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கொழும்பு புறக்கோட்டையில் உள்ள பொலிஸ் நலன்புரி கட்டிடத்தில் லலித் மற்றும் குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சோதனை நடத்தியது. ஆனால், அவர்களை அங்கு காணவில்லை.

May be an image of 3 people and people smiling

லலித் மற்றும் குகன் காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள், 15 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இந்த விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என பல செயற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். லலித் குமார் வீரராஜ், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் முக்கிய பங்காளியான மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.