புதினங்களின் சங்கமம்

அத்தையைக் கொலை செய்து நகைகளை கொள்ளயைடித்தவன் கைது!!

கம்பஹாவில் மஹாபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரகஹபொக்குன பிரதேசத்தில் தனது தந்தையின் சகோதரியை வீட்டில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்த நபரை மஹாபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 63 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் சடலம் அவர் வசித்து வந்த வீட்டில் உள்ள கட்டிலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அதன்படி பொலிஸார் விசாரணை நடத்தியதில், குறித்த கொலையை பெண்ணின் சகோதரனின் மகன் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கொலையை மேற்கொண்ட 40 வயதான சந்தேக நபர் புத்தளத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், சந்தேக நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், தனது அத்தையிடம் சுமார் ஒரு இலட்சம் ரூபா கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து வீட்டின் கட்டிலுக்கு அடியில் சடலத்தை மறைத்து வைத்து, அவரிடம் இருந்த தங்கத்தை திருடி, செட்டியார் தெருவில் உள்ள ஒரு நகை அடகு பிடிக்கும் கடையில் கொடுத்து எட்டரை இலட்சம் ரூபாவைப் பெற்றதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதிக கடன் சுமை காரணமாக பணம் பெறுவதற்காகவே இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் தனது வீட்டில் பணத்தை மறைத்து வைத்திருந்தது அவரது மனைவிக்கு தெரியாது என்று பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.