புதினங்களின் சங்கமம்

யாழில். தமிழ் மக்கள் கூட்டணியினர் மீது தாக்குதல் – பெண் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில் , பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரந்தன் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ் மக்கள் கூட்டணியினர் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடக்கிய வன்முறை கும்பல் ஒன்று , பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் முரண்பட்டு அவர்களை தாக்கியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் , மீண்டும் 20க்கும் மேற்பட்ட நபர்களுடன் அவ்விடத்திற்கு வந்து , பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த ஆண்கள் பெண்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதே வேளை யாழ்ப்பாணம்,கிளிநொச்சி உட்பட்ட பிரதேசங்களில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உட்பட்ட  முன்னாள் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாராயக்கடைகளை நடாத்துவதற்கு அனுமதிப்பத்திரங்கள் எடுத்து கொடுத்துள்ள நிலையில் குறித்த சாராயக்கடைகளில் சாராயத்தை குடித்துவிட்டு தற்போது காவாலிகள் குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு கேடு விளைவித்து வருவது தன் வினை தன்னைச் சுடும் என்பது போல் உள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.