புதினங்களின் சங்கமம்

இலங்கையில் செயற்படும் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பு! வெளியாகிய முக்கிய தகவல்

தற்கொலை தாக்குதல்களை நடத்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை விடவும் இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதற்கான தீவிர முயற்சியில் ஜமாத்தி இஸ்லாம் என்கிற அமைப்பு செயற்பட்டு வருவதாக மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜமாத்தி இஸ்லாம் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் அரச பொறிமுறையிலும், பல்வேறு அரச நிறுவனங்களிலும் அதேபோல அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிலும்கூட இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பேச்சாளரான மொஹமட் முஸம்மில், வஹாப் அடிப்படைவாதத்தை இரகசியமான முறையில் பரப்புகின்ற ஜமாத்தி இஸ்லாம் அமைப்புக்கும் ஜே.வி.பிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

‘வஹாப் அடிப்படைவாதிகள் தங்களது உபாயமார்க்கங்களை நடைமுறைப்படுத்துவதற்காக பல்வேறு பெயர்களில் அமைப்புக்களை நடத்திவருகின்றனர். அவர்கள் தங்களது நபர்களையும் பல்வேறு அரசியல் கட்டமைப்பிற்குள்ளும், இராஜதந்திர ரீதியிலான பல்வேறு இடங்களிலும் அமர்த்து செயற்பட்டு வருகின்றனர். ஸ்ரீலங்காவில் ஜமாத்தி இஸ்லாம் என்கிற அமைப்பு உள்ளது. குறித்த அமைப்பு தற்கொலை குண்டுதாரிகளை ஏற்றுக்கொள்கின்ற அமைப்பாகும். அதேபோன்று சம்பிரதாய இஸ்லாமை சேதப்படுகின்ற அமைப்பு என்பதோடு இஸ்லாமிய இராஜியம் ஒன்றை அமைப்பதற்காக மிகவும் சூட்சமமான முறையில் செயற்படுகின்ற அமைப்புமாகும். தவ்ஹீத் அமைப்பு நேரடியாக தற்கொலை செய்து ஆட்சியை அமைக்கின்ற அமைப்பாகும். ஆனால் இந்த ஜமாத்தி இஸ்லாமிய அமைப்பு பல்வேறு துறைகளில் நபர்களை நிறுவி பல்வேறு செயற்பாடுகளை செய்கின்றது. பங்களாதேஷ் நீதிமன்றம் இந்த அமைப்பிற்கு தடைவிதித்திருக்கிறது. ஜமாத்தி இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதித்துவம் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையிலும் உள்ளது. இதுபோன்ற பயங்கரமாக அமைப்பானது, ஜே.வி.பியின் நிகழ்வொன்றுக்கும் பங்கேற்றிருக்கின்றது, அந்த அமைப்பின் அமைப்பாளர் ஒருவரும் ஜே.வி.பியின் அந்த மேடையில் பேசியுள்ளார். சஹ்ரானுடன் தொடர்புவைத்திருந்த பலரும் இன்று ஜே.வி.பியுடள் தொடர்பில் உள்ளனர். ஒசாமா பின்லேடனின் இரண்டாவது நபர் எங்கே என்று யாருக்கும் தெரியாது. இந்நிலையில் அந்த நபர் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிர்ச்சியடையமுடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.