புதினங்களின் சங்கமம்

மன்னாரில் சோதனைச் சாவடிகளில் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டை பரிசோதிக்க நடவடிக்கை!

மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் எதிர் வரும் புதன்கிழமை 15 ஆம் திகதி தொடக்கம் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டை பரிசோதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பீ.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை (13) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முடிவுக்கு வருகின்ற நிலையில் உள்ளது.இதன் அடிப்படையில் இது வரையில் 71,396 பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியையும் , 56,363 பேர் இரண்டாவது தடுப்பூசியும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

முதலாவது தடுப்பூசியை 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் 30 சதவீதமாகவும், 2 வது தடுப்பூசியை 68 சதவீதமானவர்களும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதே வேலை கடந்த வாரம் முதல் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் கடமையாற்றுகின்ற 29 மற்றும் 30 வயதிற்கு இடைப்பட்ட வர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையாக 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப் பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.

அத்தோடு விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும்,தரவுகள் சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த இரு நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 101 பேர் கொரோனா தொற்றுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் 66 பேர் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.