புதினங்களின் சங்கமம்

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பத்தை நிலைமை சீரடையும் வரை இடைநிறுத்துக!

இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரலை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளைக் கருத்தில்கொள்ளாது, எதிர்வரும் ஜுன் 11ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கக் கோரியுள்ளமைக்கும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலைமை சீரடையும் வரை விண்ணப்பம் கோரலை இடைநிறுத்துமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜுன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டின் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் சிகிச்சை நிலையங்கள் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர் எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, இணையவழி விண்ணப்பத்தைப் பூரணப்படுத்தும் வசதியற்ற கிராமப்புற மாணவர்கள் இருக்கின்றனர் எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.