புதினங்களின் சங்கமம்

யாழில் மீனவர்களின் படகை இடித்து உடைத்த இந்திய இழுவைப்படகு! தத்தளித்த மீனவர்கள் மீட்பு!

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாதகல் மீனவர்களின் மீன்பிடிப் படகினை இந்திய இழுவைப்படகு மோதித் தள்ளியதில் மீன்பிடிப் படகு உடைந்ததுடன் இயந்திரம் உட்பட்ட உபகரணங்களும் கடலில் மூழ்கியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மாதகல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் மீன்பிடி நடவடிக்கைக்காக ஒரு படகில் நேற்று சென்றிருக்கின்றனர்.

இன்று காலை வரையில் அவர்கள் கரை திரும்பாத நிலையில் அவர்களைத் தேடி மாதகலைச் சேர்ந்த மீனவர்கள் சென்றிருக்கின்றனர்.

அதன் போது, கடலில் வலை மிதக்கப்பயன்படுத்தப்படும் மிதவை (போயா) வை பிடித்தபடி இருவரும் தத்தளித்தபடி காணப்பட்டுள்ளனர்.

அவர்களை உடனடியாக மீட்ட மீனவர்கள் அவர்களிடம் கேட்டபோது,

கடந்த இரவு தாம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்திய இழுவைப்படகு தமது படகினை மோதிச் சென்றதாகவும் அதனால் தமது படகு உடைந்து இயந்திரம் உட்பட்ட உபரணங்கள் கடலில் மூழ்கியதாகவும் கடலில் வீழ்ந்த தாம் நீந்தி வலை மிதக்கப் பயன்படுதம் மிதவையை பிடித்து நீந்தியபடி தத்தளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.