புதினங்களின் சங்கமம்

மர்மமாக உயிரிழந்த 15 வயது தமிழ் மாணவி மகேந்திரன் யசோதா!! (Photos)

நானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்த மகேந்திரன் யசோதா என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

“மகள் நேற்றிரவு 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நாம் நித்திரைக்கு சென்றுவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்து பார்க்கும்போது மகளைக் காணவில்லை. இதனையடுத்து தேட ஆரம்பித்தோம்” என்று யசோதாவின் தாயார் நானுஓயா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஊர் மக்களும் இணைந்து தேட ஆரம்பித்தனர். இந்தநிலையில் இன்று காலை தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து கொய்வதற்கு சென்றுக்கொண்டிருக்கையிலேயே வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் யசோதா சடலமாகக் கிடப்பதை கண்டு அறிவித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.