யாழில் சவப்பெட்டியுடன் ஊர்வலம்!! எதற்காக?? (Video, Photos)
கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகத் தெல்லிப்பழைப் பிரதேச முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை(24) யாழ். தெல்லிப்பழையில் “கொரோனாவிலிருந்து எம்மைப் பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நேற்றுக் காலை-09.30 மணியளவில் தெல்லிப்பழைச் சந்தியில் சவப்பெட்டியுடன் ஆரம்பமானது.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் “கொரோனாத் தொற்றுதலை முற்றாக ஒழிப்போம்”, “சமூக இடைவெளிகளைப் பின்பற்றவும்”, ” கையைச் சவர்க்காரமிட்டுக் கழுவவும்”, “சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவோம்” உள்ளிட்ட கொரோனா தொடர்பான விழிப்புணர்வுப் பதாதைகளைத் தாங்கியவாறும், முகக் கவசங்கள் அணிந்தும் இடம்பெற்றது.
குறித்த ஊர்வலத்தில் தெல்லிப்பழைப் பிரதேச முதியோர் சங்கத் தலைவர் வை. சுப்பிரமணியம், செயலாளர் வி. தனராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வலி. தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் சி. லகிந்தன், அரசியல் செயற்பாட்டாளர் க. விஸ்ணுகாந்த், வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவரும், வலி. வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் துணைத் தவிசாளருமான ச.சஜீவன், தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமணசேகர, தெல்லிப்பழைப் பொலிஸ் நிலைய பிரதிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத், தெல்லிப்பழைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி ஊர்வலம் நேற்றுக் காலை-10.15 மணியளவில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய முன்றலில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தெல்லிப்பழைப் பிரதேச முதியோர் சங்கத்தின் செயலாளர் வி. தனராஜ் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு உரைகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் தெல்லிப்பழைப் பிரதேச முதியோர் சங்கத் தலைவர் வை. சுப்பிரமணியம், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவரும், வலி. வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் துணைத் தவிசாளருமான ச.சஜீவன், தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையப் பிரதிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் ஆகியோர் உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து மேற்படி விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் களைப்பைப் போக்கும் வகையில் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் சிற்றுண்டிகளும், தேநீரும் பரிமாறப்பட்டது.
இதேவேளை, குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தின் ஒரு கட்டமாக “கொரோனாவிலிருந்து எம்மைப் பாதுகாப்போம்” எனும் தலைப்பிலான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.







{செய்தித் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ. ரவிசாந்}




