புதினங்களின் சங்கமம்

யாழில் திடீரென பிறேக் பிடித்ததால் கழன்றோடிய தலைக் கவசம்! உயிரிழந்த இளம் பெண்!!

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் விபத்துக்குள்ளான போது தலைக்கவசம் கழன்று வீழ்ந்ததால் தலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சதீனா (38) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழை பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது வீடு நோக்கி கடந்த 21ம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன் போது திடீரென பிரேக் பிடித்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார். அத்துடன் அவர் அணிந்திருந்த தலைக்கவசம் கழன்று வீழ்ந்துள்ளது.

இதனால் தலையில் படுகாயமடைந்து மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.