தமிழர்களின் கறைபடிந்த நாளில் அமைச்சர் யாழில் குத்தாட்டம் – மக்கள் விசனம்..!
தமிழர்களின் கறைபடிந்த நாளான ஜூலை 23 ஆம் திகதியான இன்று, தென்னிலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் ‘சகோதரத்துவம்’ எனக் கூறி வந்த அமைச்சர் யாழில் குத்தாட்டம் போடும் காட்சிகளை தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்றைய தினம் ஜூலை 23 இல் சகோதரத்துவ நாளாக தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் பெரும்பான்மை இன மக்கள் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டனர்.
ஒற்றுமையாய் வாழ்வோம், சகோதரராய் வாழ்வோம் எனக் கூறி புகையிரதம் மூலம் அழைத்து வரப்பட்ட நபர்களுடன் யாழ். நகரப் பகுதி ஒன்றில் அமைச்சர் குத்தாட்டம் போடுவது தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஜூலை 23 தமிழர்கள் வாழ்வில் அழிக்க முடியாத கறைபடிந்த நாளாக பார்க்கப்படுகின்ற நிலையில் ‘சகோதரத்துவம்’ எனக் கூறி மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது குத்தாட்டம் போடுவது ஏற்புடையதல்ல எனப் பல்வேறு தரப்பினரும் கருத்துரைத்து வருகின்றனர்.

