புதினங்களின் சங்கமம்

முழுமையாக ஆரம்பிக்கவுள்ள பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை மறுதினம் முதல் முழுமையாக ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் ஒரு மீற்றர் இடைவெளியை பேண முடியுமானால் அனைத்து மாணவர்களையும் அழைக்க முடியும்.

200 ஐ விட அதிக மாணவர்கள் காணப்படுகின்ற பாடசாலைகளில் கட்டம் கட்டமாக மாணவர்களை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 200 ஐ விட அதிக மாணவர்களைக் கொண்டு பாடசாலைகளில்,

திங்கட்கிழமை – 1, 2 ஆம் வகுப்புக்கள்

செவ்வாய்கிழமை – 2 , 5 ஆம் வகுப்புக்கள்

புதன்கிழமை – 3 , 5 ஆம் வகுப்புக்கள்

வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை – 4 , 5 ஆம் வகுப்புக்கள் என்ற ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.

ஏனைய வகுப்புக்கள்,

திங்கட்கிழமை – 6 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்

செவ்வாய்கிழமை – 7 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்

புதன்கிழமை – 8 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்

வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை – 9 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள் என்ற ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.

பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி 6 , 7 , 8 , 9 ஆம் தர வகுப்புக்கள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பகல் 1.30 இற்கு நிறைவடையும்.

10 , 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்களுக்கு காலை 7.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அனைத்து ஆசிரியர்களும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று பாடசாலைக்கு வருகை தர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.