கொரோனாவை ஒழிக்கும் முன் ஊரடங்கை நீக்க வேண்டாம்! பெரிய பேரழிவுகளை தரும்… உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!!
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் போடப்பட்டுள்ள லாக்டவுனை வைரஸை ஒழிக்கும் முன் தளர்த்தினால், மிக ஆபத்தான வேகத்தில் வைரஸ் மீள்எழுச்சி பெற்று விடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானாம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சில நாடுகள் அந்த பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்தும் முன்பே லாக்டவுனை நீ்க்கவோ அல்லது கட்டுப்பாடுகளை தளர்த்தவோ முடிவெடுக்கிறார்கள். ஆனால், அது மிகப்பேரழிவான முடிவுக்கு இட்டுச்செல்லும்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில்தான் லாக்டவுன் உத்தரவி்ட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள்.
ஆனால், அதன் பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரும் முன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால், கொரோனா வைரஸ் மீள் எழுச்சி பெற்று மோசமான பேரழிவுகளைத் தரும்.
லாக்டவுனை நீக்கும் முன் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய 6 முக்கிய விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக பரவலை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும், இரண்டாவதாக மக்களுக்கு போதுமான அளவு பொதுச்சுகாதாரச் சேவையை தயாராக வைத்திருக்க வேண்டும், மூன்றாவதாக வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும்,
நான்காவதாக பணியிடங்களிலும், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும், 5வதாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை சரியாக சோதனைக்கு உட்படுத்தும் வழிகளை கையாளவேண்டும், 6-வதாக அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு விடயங்களையும், கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் சென்ற சேர்ந்திருக்க வேண்டும.
இவை அனைத்தையும் முழுமையாக செய்த பின்புதான் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

