இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு டெல்லி சிறையில் தூக்கு!!

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங்ஈ அக்சய் குமார் சிங்ஈ வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து வீதியில் வீசப்பட்டார். சிங்கப்பூரில் 13 நாள் சிகிச்சைக்குப்பின் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி குற்றவாளிகள் 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகள் 4 பேரும் தனித்தனியாக தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா குற்றச் சம்பவம் நடந்தபோது தான் பதின்மவயது உடையவராக இருந்தேன் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2012 டிசம்பர் 16-ம் தேதி டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, நான் அந்த இடத்தில் இல்லை. ஆதலால் என் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கூறி முகேஷ் சிங் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில் அந்த மனுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏற்கனவே முதல்முறையாக ஜனவரி 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவைத் தள்ளிப்போடும் நோக்கில் கருணை மனு, சீராய்வுமனுவை குற்றவாளிகள் தாக்கல்செய்து தண்டனையை தள்ளிவைத்தனர்.

2-வது முறையாக பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூகக்{ தண்டனை விதிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் டெத்வாரண்ட் பிறப்பித்தது. அப்போதும் கருணை மனுத்தாக்கல் செய்து தங்கள் தண்டனையை குற்றவாளிகள் தள்ளி வைத்தனர்.

அதன்பின் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் மூன்றாவது முறையாக டெத் வாரண்ட் பிறப்பித்தது. அப்போதும் குற்றவாளிகள் கருணை மனு, சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து தண்டனையை தள்ளி வைத்தனர்.

இதையடுத்து, இறுதியாக மார்ச் 20-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என 4-வது முறையாக டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளான கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டன, சீராய்வு மனுக்களும், மறுஆய்வு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து தூக்கு தண்டனைக்கு முதல்நாளான நேற்று கூட குற்றவாளிகளில் 3 பேர் அக்சய் குமார், பவன் குப்தா, முகேஷ் ஆகிய 3 பேரும் டெல்லி விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மாறி, மாறி மனுத்தாக்கல் செய்து தங்களின் தண்டனையை நிறுத்தி வைக்க முயன்றனர். ஆனால், அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இறுதியாக டெத் வாரண்டை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை தாக்கல் செய்த மனுவும் இரவு விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவு குற்றவாளிகளின் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் மேல்முறையீடு செய்து தண்டனையை நிறுத்திவைக்கக் கோரினார்.

இந்தமனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி,ஏஎஸ்.போபண்ணா, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு நள்ளிரவில் 20 நிமிடங்கள் வரை விசாரித்து தண்டனையை நிறுத்த வைக்க மறுப்புத் தெரிவித்தனர்.

இதனால், அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை குற்றவாளிகள் 4 பேருக்கும் நிறைவேற்றப்படுவது உறுதியானது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. குற்றவாளிகள தூக்கிலிடுவதற்காக உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹேங்மேன் பவான் ஜலாத் வரவழைக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை 4.30 மணிமுதல் திஹார் சிறையில் நடந்த சம்பவங்கள் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது..

இன்று அதிகாலை 4.30 மணி்க்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஹேங்மேன் பவான் ஜலாத் எழுந்து தனது பணிகளைத் தொடங்கினார்

காலை 4.48 மணிக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் சிறையில் மருத்துவ அதிகாரிகள் உடல்பரிசோதனை செய்ததில் அவர்கள் 4 பேரும் முழு உடல்தகுதியுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அழைத்துச் செல்ல தயார்செய்யப்பட்டபின், சிறையின் கதவுகள் மூடப்பட்டன

4.50 மணிக்கு திஹார் சிறையின் வாசலில் மக்கள் கூட்டம் கூடத்தொடங்கியது

5.13 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரும் முகத்தில் கறுப்பு துணியிட்டு தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

5.20 மணிக்கு சிறைக்கு வெளியே மக்கள் கூட்டம் கூடி, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கோஷமி்ட்டனர். இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

5.30 மணிக்கு குற்றவாளிகள்4 பேரும் தூக்கிலிடப்பட்டதாக டெல்லி திஹார் சிறை நிர்வாகம் அறிவித்தது.