பல்சுவை செய்திகள்

யாழில் 15வயதுச் சிறுமியை மடப்பள்ளிக்குள் வைத்து பலதடவை வல்லுறவுக்குள்ளாக்கிய கோவில் ஐயர்!!

பள்ளி மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி வாங்கி கொடுத்து, அதனூடாக அழைப்பை ஏற்படுத்தி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்து வந்தமை வல்வெட்டித்துறை பொலிஸாரின் சிறப்பான புலன் விசாரணை ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு வந்ததை கண்டுபிடித்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில் விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு அதிகாரிகள் மேலதிக புலன் விசாரணை மேற்கொண்ட பிற்பாடு வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதோடு மாணவியிடம் கைப்பற்றிய சந்தேக நபரான கோயில் ஐயர் கொடுத்த தொலைபேசியை சான்று பொருளாக ஒப்படைத்ததாக அறியமுடிகின்றது.

கோயில் ஐயர் காசு மற்றும் உணவு பொருட்களை கொடுத்து சிறுமியை நயவஞ்சகமாக கோயில் மடப்பள்ளிக்குள் அழைத்து தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி உள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் மாணவியின் சித்தப்பாவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கண்டறிந்து உள்ளனர்.

கோயில் ஐயர் மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்து 28.11.2019 அன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வல்வெட்டித்துறை கோயிலுக்குள் வைத்து ஐயரால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.