சோனகத் தாயும் போராளிப் பிள்ளையும்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….
எதிரியே என்றாலும் நீங்கள் சுடக்கூடாத மூன்று சந்தர்ப்பங்களை நினைவில் வைத்திருங்கள். ஒன்று எதிரி தாகத்தோடு தண்ணீர் அருந்தும்போது, இரண்டாவது அவன் பசியோடு உணவு அருந்தும்போது, மூன்றாவது அவன் இயற்கை உபாதையைக் கழிக்கும்போது.” இவ்வாறு தலைவர் சொல்லித்தான் அனுப்பினார்.
இதை நினைவில் வைத்த ஆராதனாவால், உணவருந்திக்கொண்டிருந்த அந்தச் சிங்கள இராணுவ வீரனைச் சுட முடியவில்லை.
மன்னார் பகுதியில் ஓர் இராணுவத் தளத்தைத் தாக்கி அழித்துவிட்டு வேகமாகப் பின்வாங்கி, வள்ளங்களில் ஏறித் தங்கள் இடத்திற்கு வர வேண்டும் போராளிகள்.
ஆராதனா மட்டும் இராணுவ முகாம் எல்லைக்குள் மாட்டிக்கொண்டார். கண்டல் காட்டைத் தாண்டிச் சென்று வள்ளத்தில் ஏற வேண்டும். அது பின்மாலை நேரம்.
ஓர் இராணுவ வீரனைத் தாண்டிச் செல்ல வேண்டும். அவன் உணவருந்திக் கொண்டிருந்தான்.
சுடாமல் மெதுவாக நகர்ந்தாள் ஆராதனா.
“சடார்” என வெடிச்சத்தம். ஆராதனாவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. சரிந்து விழுந்தாள். தன் வயிறு கிழிந்துவிட்டதை உணர்ந்தாள்.
ஓடினாள். வயிற்றிலிருந்து வெளியே வந்த குடலை அழுத்திப் பிடித்துக்கொண்டு ஓடினாள்.
அருகிலிருந்த ஓர் ஊரை அடைந்தாள்.
ஆராதனாவின் கோலத்தைக் கண்ட ஒரு “சோனகத் தாய்” ஆராதனாவைத் தாங்கித் தன் வீட்டுக்குள் அழைத்துச்சென்று படுக்க வைத்தார். அவர் படுக்க வைக்கும்போது ஆராதனாவின் குடல் வெளியே வந்திருந்தது.
போராளி ஆராதனா அணிந்திருந்த போராளிகளுக்கான உடையைக் கழற்றிவிட்டு, சோனகப் பெண்கள் அணியும் “பர்தா”வை அணிவித்தார்.
வேகமாகத் தண்ணீரைக் கொதிக்க வைதார். அது இளம் சூடான பிறகு அதில் மஞ்சளை இட்டு, வெளியே வந்திருந்த ஆராதனாவின் குடலைக் கழுவி உள்ளே வைத்துத் துணியால் கட்டினார்.
வெளியே சென்றிருந்த அந்தச் சோனகத் தாயின் மகன் வந்தார். நடந்ததைக் கூறினார். இரவாகும் வரை காத்திருந்தார்கள். இரவு வந்தது.
அந்தச் சோனகத் தாயின் மகன் ஆராதனாயைத் தோளில் தாங்கிக்கொண்டார். கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆராதனா வள்ளத்தில் ஏற்றப்பட்டுப் புலிகளின் நிர்வாக எல்லைக்குள் அனுப்பப்பட்டார்.
— வெற்றிச்செல்வி (குப்பி)

