புலம்பெயர் தமிழர்களே அவதானம்!! கட்டுநாயக்காவில் ஜேர்மன் தமிழனுக்கு நடந்த அநீதி!!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறும் ஊழல் மற்றும் கையூட்டு நடவடிக்கைகளால் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட தமிழ் பயணி ஒருவர் தனது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி அன்று, அபுதாபி வழியாக ஜெர்மனியின் பிராங்போர்ட் நகருக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற பயணி ஒருவரே இத்தகைய அநீதிக்கு முகமளித்துள்ளார்.
ஆன்லைனில் செக்-இன் (Check-in) செய்திருந்ததால், ஆரம்பக்கட்ட சோதனைகளின் பின்னர் பொதிகளை ஒப்படைக்கும் கவுண்டருக்குச் சென்றபோது, அந்தப் பயணியின் மடிக்கணினி அடங்கிய கைப்பை அனுமதிக்கப்பட்ட எடை எல்லைக்குள்ளேயே இருந்துள்ளது. எனினும், கவுண்டரிலிருந்த அதிகாரி பயணியின் தோளில் தொங்கிக்கொண்டிருந்த சிறிய பையையும் எடை பார்க்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
கத்தார் ஏர்வேஸ் சேவைகளில் இவ்வாறு செய்யப்படுவதாக அந்த அதிகாரி காரணம் கூறியுள்ளார். அதன் பின்னர், மேலதிக எடைக்காக 160 டாலர் செலுத்த வேண்டும் எனவும், அல்லது தமக்கு நேரடியாக 100 டாலர் லஞ்சமாகக் தந்தால் லக்கேஜ் டேக் போட்டு விடுவதாகவும் அந்த அதிகாரி ரகசியமாக பேரம்பேசியுள்ளார்.
பயணியிடம் பணம் இல்லாத நிலையில், தனது தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்ப முடியும் எனவும் அந்த அதிகாரி தைரியமாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதியில் விமானத்தைத் தவறவிடக் கூடாது என்பதற்காக, தனது லக்கேஜில் இருந்த 4 இளநீர்கள் மற்றும் சிறிய பலகாரப் பையை அங்குள்ள ஊழியர் ஒருவருக்கு வழங்கி எடையைக் குறைத்து, அப்பயணி பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
நாட்டின் முன்னேற்றக் கட்டடங்களும் நவீன அமைப்புகளும் மட்டும் போதாது என்று, விமான நிலையம் போன்ற பிரதான இடங்களில் உள்ள அதிகாரிகளின் நேர்மையும் பொறுப்புணர்வுமே நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

