லண்டனில் வீடுகளுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடவடிக்கை! இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!
பிரித்தானியாவின் லண்டனில் வீடுகளுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடவடிக்கைகளை குடிவரவு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதற்கமைய Southall, Wembley ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், விசா இல்லாத இலங்கை தமிழர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் விநியோக சாரதிகளாக (Delivery Drivers) சட்டவிரோதமாக பணிபுரிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அத்துடன் Westminster-இல் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, விசா இல்லாத 15 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
Bromley-யில் உள்ள கேரவன் தளம் ஒன்றில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படுகின்ற 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் மாதம் முதல் ‘Gig economy’ மற்றும் ‘Zero-hours’ ஒப்பந்தங்களில் தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், தங்கள் சார்பில் பணிபுரியும் எவரும் பிரித்தானியாவில் வேலை செய்ய தகுதி உடையவர்களா என்பதை சட்டப்பூர்வமாக சரிபார்க்க வேண்டும்.
அவ்வாறு தவறவிடும் நிறுவனங்கள் ஒரு தொழிலாளருக்கு 60,000 பவுண்ட்ஸ் வரை அபராதம், பணியாளர் தகுதி நீக்கம் மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை உட்பட கடுமையான சிறைத்தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
அடுத்து வரும் ஆண்டுகளில் குடிவரவு அமலாக்க வரவு செலவுத் திட்டத்தை இரட்டிப்பாக்கவும், பணியாளர்களின் எண்ணிக்கையை 60% அதிகரிக்கவும் உள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதேவேளை 2024-ஆம் ஆண்டில் தொடக்கத்திலிருந்து லண்டன் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,250-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

