யாழில் பிரான்ஸ் இளைஞனுடன் திருமணம் முடித்து ஒரு மாதம்! பழைய காதலனுடன் பட்டதாரி மணமகள் ஓட்டம்!
யாழில் கடந்த மாதத் தொடக்கத்தில் பட்டதாரி யுவதியைக் கைபிடித்த பிரான்ஸ் இளைஞன், தற்போது நடுத்தெருவில் நிற்கிறார். திருமணமாகி இன்னும் ஒரு மாதம் கூட முடியாத நிலையில், புதுமணப் பெண் தனது பழைய காதலனுடன் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகிறது.
யாழ். வலிகாமம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான மணமகளான பட்டதாரிப் பெண், பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் படிக்கும் போது, அதே பீடத்தில் கற்று வந்த பூநகரிப் பகுதியைச் சேர்ந்த இளைஞனைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் இருதரப்புக்கும் தெரியவந்த நிலையில், பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் திருமணம் முடிப்பதற்கு இரு தரப்பும் முடிவு செய்திருந்தன.
இந்நிலையில், காதலனின் தாயார் தனது இளைய மகளின் தேவைக்காக 30 லட்ச ரூபாயைச் சீதனமாகத் தருமாறு கோரியுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குச் சென்ற காதலன், காதலியின் உறவினர்களால் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதன் தொடர்ச்சியாக, இரு தரப்பும் பொலிஸ் நிலையம் வரை சென்று வந்திருந்தனர். இதன் பின்னர், இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து 2018ஆம் ஆண்டளவில் பிரான்ஸ் சென்று தொழில் புரிந்து வந்த 35 வயதான இளைஞனை, புரோக்கர் மூலம் குறித்த பட்டதாரிப் பெண்ணுக்கு நிச்சயம் செய்து, கடந்த மாதத் தொடக்கப்பகுதியில் கோலாகலமாகத் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.
திருமணம் முடிந்து யாழ்ப்பாணத்தில் பட்டதாரிப் பெண்ணான மனைவியுடன் தங்கியிருந்த கணவன், தனது தாயாருக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சைக்காக மனைவியை அவளது பெற்றோருடன் விட்டுவிட்டு இரு தடவைகள் கொழும்பு சென்று வந்துள்ளார். அடுத்த தடவை அவர் கொழும்பு சென்ற போது, பெற்றோருடன் தங்கியிருந்த மனைவி, யாழ். நகருக்குச் செல்வதாகக் கூறிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகிறது.
மாலை 3 மணிக்குச் சென்ற மகள், இரவு 9 மணியாகியும் வீடு திரும்பாததை அடுத்து, அவளது தொலைபேசிக்கு பல தடவை தொடர்பு கொண்ட போதிலும், அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அச்சமடைந்த மனைவியின் உறவினர்கள், உடனடியாகக் கணவனுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். மேலும் பிரான்ஸ் இளைஞனான கணவனின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் முடிவில், மனைவி தனது பழைய காதலனுடன் சேர்ந்து இருப்பதைக்கண்டு பிடித்துள்ளனர். பொலிஸாரின் நேரடித் தொலைபேசி அழைப்பு வந்ததை அறிந்த மனைவி, தான் தனது காதலனுடன் சேர்ந்து வாழ்வதாகவும், பெற்றோர் தனக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர் என்றும் கூறியதால், பொலிஸார் விசாரணைகளைக் கைவிட்டுள்ளனர்.
தனது மனைவியிடம் எந்தவித சீதனமும் வாங்காது, 21 பவுனில் தாலிக்கொடி மற்றும் 9 பவுன் நகைகள் அடங்கலாக 30 பவுன்களுக்கு மேலான நகைகள் மற்றும் பணம் உட்பட ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகளுடன் மனைவி மாயமாகிப் போனதால் கணவன் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். தான் போட்ட தாலிக்கொடி உட்பட நகைகளையும், கல்யாணச் செலவுகளையும் மீளச் செலுத்துமாறு மனைவியின் பெற்றோரிடம் முரண்பட்டதுடன், பொலிஸாரிடமும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

