யாழில் 17 வயதான தவில் வித்துவான் தற்கொலை செய்ததன் பின்னணி என்ன?
தவில் வித்துவான் சச்சின் இவரது வயது 17 தான் ஆனால் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இப்படியான மரணங்கள் அதிகரித்துள்ளது…
8 வயதில் தவில் மீது நடனமாடிய விரல்கள் 17 வயதில் ஓய்ந்து போன துயரம்!
அவரது சொந்த இடம் இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கு. பெயர் பிரசாந் சச்சின். வயது 17.
தனது 8 வயது வயதில் தவில் கலைஞனாக பயணத்தை ஆரம்பித்தார். தற்போது 17 வயது. ஏனைய கலைஞர்களை போல் தவில் வாசிப்பதை விட தனக்கென ஒரு புதிய நுணுக்கத்தை கையாண்டு தவில் வாசிப்பதில் அவர் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 21 ஆம் திகதி அராலி பேச்சியம்மாள் ஆலயத்தில் சச்சின் தவில் வாசிப்பதை முதன் முறையாக பார்த்தேன். நான் பார்த்த இறுதி கச்சேரியும் அதுவே. மற்றைய தவில் கலைஞர் தவில் வாசிக்கும் போது சச்சின் பரபரப்பாக கைபேசியை பயன்படுத்துவதையும், தனது நேரம் வரும் போது தவிலை வாசிப்பதுமாக இருந்தார். இதனை நான் நீண்ட நேரமாக அவதானித்தேன்.
நேற்றைய தினம் புங்குடுதீவு ஆலயம் ஒன்றுக்கு தவில் கச்சேரிக்கு சென்றுவிட்டு வீடு வந்துள்ளார். அதன்பின்னர் அச்சுவேலியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தவில் கச்சேரிக்கு செல்ல வேண்டி இருந்தது. தந்தையும் அதே துறையிலேயே பணியாற்றுகிறார். எனவே அச்சுவேலி ஆலயத்திற்கு கச்சேரிக்கு வருமாறு கேட்ட வேளை அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதன்போது சிறிய முரண்பாடு அவர்களுக்குள் ஏற்பட்டது.
இதேவேளை பருத்தித்துறையை சேர்ந்த 27 வயதுடைய ஒருவருக்கும் அந்த தவில் கலைஞருக்கும் இடையே ஒரு பிரச்சினை இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் சச்சின் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இந்த செய்தியானது தவில் நாதஸ்வர கலைத்துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கும் பேரிடியாக விழுந்துள்ளது.
சச்சினுக்கு 18 வயது வந்ததும் அவரை வெளிநாட்டுக்கு எடுப்பதற்கு புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்கள் தயாராகி வந்ததாகவும் அறியக் கிடைக்கிறது.
எனவே சச்சினது இழப்பு என்பது அவரது பெற்றோர், உறவினர்களுக்கான இழப்பு மட்டுமல்ல. கலைத்துறையினர், புலம்பெயர் தேசத்தவர்கள், இசை ரசிகர்கள், இலங்கை வாழ் மக்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகவே பார்க்கப்படுகிறது.

