கிளிநொச்சியில் வீதி விபத்து: யாழ்ப்பாண இளைஞன் பலி!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் நிதர்சன் என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் பலியானவராவார்.இவர் கிளிநொச்சி பகுதியில் தனது தினசரி பணியினை முடித்துக்கொண்டு, நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பிரதான வீதி வழியாக பயணித்துள்ளார்.
உமையாள்புரம் பகுதியைச் சென்றடைந்த போது, மோட்டார் சைக்கிள் திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தின் போது ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக, அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் இளைஞனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.இவ்விபத்து குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



