மாலைதீவுக்கு ஓடித்தப்பினார் கோத்தபாய!! (Video)
ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு சென்றுள்ளார். உள்ளூர் நேரப்படி சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலேவில் தரையிறங்கியதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ஒருவாறு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
சர்வதேச செய்தி ஊடகங்களது தகவல்களின் படி இராணுவ விமானம் ஒன்றில் அவரும் அவரது மனைவி உட்பட வேறு மூவரும் மாலைதீவு நோக்கிப்
புறப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற தகவலை
ஜரோப்பிய நேரம் இன்று அதிகாலை பிபிசி உறுதி செய்தது. ஆனால் அவரது விமானம் எந்த நாட்டுக்குச் செல்கிறது என்பதை அது குறிப்பிடவில்லை.
அதேசமயம், 73 வயதான கோட்டாபய, அவரது மனைவி, மெய்க்காவலர் ஒருவர் உட்பட நான்கு பேர் அன்ரனோவ் – 32 ரக விமானம் ஒன்றில் கட்டுநாயக்காவிலிருந்து மாலைதீவுத் தலைநகர் மாலேக்குப் புறப்பட்டுள்ளனர் என்பதை விமான நிலைய அதிகாரிகள் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்களது கடவுச் சீட்டுக்கள் முத்திரையிடப்பட்டு இராணுவ விமானம் ஒன்றில் ஏறிப் புறப்பட்டுச்
செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று பயண ஏற்பாடுகளைக் கையாள்கின்ற குடியகல்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோட்டாபய மாலைதீவைச் சென்றடைந்து விட்டாரா என்பது இன்று அதிகாலை
இச் செய்தியை எழுதும் வரை உறுதிப்படுத்தப்படவில்லை.
மாலைதீவில் விமானம் இறங்குவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட
இழுபறிகள், தாமதம் காரணமாக கோட்டாபயவின் விமானம் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக விமான நிலையத்தில் தரித்து நின்றது என்பதை அதிகாரி ஒருவர் ஏஎப்பி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் ஜனாதிபதியோடு செல்கின்ற நான்காவது நபர் பஸில் ராஜபக்சே என்று ஒரு தகவல் தெரிவித்தது. ஆனால் அவர் அதே விமானத்தில் செல்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவரும் கொழும்பை விட்டுப் புறப்பட்டுள்ளார் என்ற தகவலை பிபிசி வெளியிட்டுள்ளது.
கோட்டாபய மாலைதீவில் ஒதுக்குப் புறம் ஒன்றில் சில தினங்கள் தங்கியிருந்து விட்டுப் பின்னர் அங்கிருந்து டுபாய்க்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய இன்று புதன்கிழமை பகல் ஒருமணிக்கு முன்பாகப் பதவி விலக வேண்டும் என்று காலக் கெடு விதித்திருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் தலைநகரில் பெரும் கிளர்ச்சி ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
கோட்டாபய தான் பதவி விலகும் கடிதத்தில் ஏற்கனவே ஒப்பமிட்டுவிட்டார் என்றும் அந்தக் கடிதம் இன்று சபாநாயகரது கைகளுக்குக் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தடுத்து வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அவர் பதவியில் இருக்கின்ற சமயத்திலேயே நாட்டை
விட்டு வெளியேறிவிட முயற்சித்து வந்தார்.
