சட்டவிரோத மண்ணகழ்வுக்கு எதிராக முறைப்பாடு செய்பவர்களுக்கு கொலைமிரட்டல்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்பவர்களுக்கு கொலைமிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட மருதமடு குளம் மற்றும் கள்ளவெட்டை குளங்களுக்கு அருகாமையில் சட்டவிரோத மண்ணகழ்வுக்கு இடம்பெறுவதனால், குளங்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டவிரோத செயற்பாடானது இரவுபகலாக தொடர்ந்து இடம்பெறுவதுடன், அகழப்படும் மணல் கனரக வாகனங்களின் மூலம் வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்பாடு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம், முறைப்பாடு செய்த நிலையில், முறைப்பாடு செய்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கொலை மிரட்டல் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்ட போதும், பொலிஸார் இதுவரையில் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

