மன்னாரில் பாழடைந்த கிணற்றில் வீழ்ந்த மிகப்பெரிய யானை!! (Photos)
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக்கடந்தான் பகுதியில் காணப்பட்ட பாழடைந்த கிணற்றினுள் யானை ஒன்று வீழ்ந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு பலத்த சிரமத்தின் மத்தியில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை(23) பாழடைந்த கிணற்றினுள் வீழ்ந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாலை அப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் கிணற்றில் யானை வீழ்ந்து கிடப்பதை கண்டு அடம்பன் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
அடம்பன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததோடு, இராணுவத்தினரின் உதவியுடன் யானையை மீட்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
யானையை மீட்க முடியாத நிலையில் ஜே.சி.பி.இயந்திரத்தின் உதவியுன் மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
நீண்டநேர போராட்டத்தின் பின் இரவு 8.30 மணியளவில் பாழடைந்த கிணற்றில் இருந்து யானை உயிருடன் மீட்கப்பட்டது.
பின்னர் யானை அப்பகுதியில் உள்ள காட்டிற்குள் விரட்டி விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





