புதினங்களின் சங்கமம்

கைப்பொம்மை ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை – சஜித் பிரேமதாச

ஒருபோதும் கைப்பொம்மை ஜனாதிபதியாக தான் இருக்கப்போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தெரணியகல நகரில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வேறொருவரின் அதிகாரதின் கீழ், பிறிதொருவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு செயற்படக்கூடிய கைப்பொம்மை ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை.

இந்த நாட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படும் போது என்னைக் கட்டுப்படுத்தக்கூடிய, என்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வல்லமை சாதாரண மக்களாகிய உங்களுக்கு மாத்திரமே இருக்கின்றது.

நாட்டை ஆட்சி செய்யும் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு ஒரு சட்டமும், சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு வேறொரு சட்டமும் இருக்க முடியாது.

அவ்வாறானதொரு யுகம் கடந்த காலங்களில் காணப்பட்டது. ஆனால் என்னை நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதி ஆக்கும் போது நாட்டின் ஆட்சியாளராவது நீங்களேயன்றி வேறெவரும் அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என கூறினார்.