நெடுந்தீவு கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய இந்திய படகு; 11 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!
இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு (05) சீரற்ற வானிலை காரணமாக கடலில் அனர்த்தத்திற்குள்ளாகியிருந்தது.
குறித்த படகில் 11 இந்திய மீனவர்கள் பயணித்த நிலையில், அவர்கள் ஆபத்தில் சிக்கியிருந்தனர்.
இதனையடுத்து, மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் உடனடியாக ஆரம்பித்தனர்.
நீண்ட நேர முயற்சியின் பின்னர் இன்று (06) குறித்த 11 மீனவர்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மீட்கப்பட்ட அனைத்து மீனவர்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, கடல் கொந்தளிப்பு காரணமாக கரையொதுங்கியுள்ள குறித்த இழுவைப் படகை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

