புதினங்களின் சங்கமம்

திருமலையில் ‘கெம்பா’ உட்பட மூவர் கைது; வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு!

திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ உட்பட மூன்று சந்தேக நபர்கள் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.

உப்புவெளி மின்சார நிலைய வீதியில் வைத்து நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கணிசமான அளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான ‘கெம்பா’விடமிருந்து 16 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் இரண்டு கூர்மையான வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இக்குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் சட்டத்தின் 54ஆவது பிரிவின் கீழ் போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதுடன், சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

May be an image of knifeMay be an image of scooter, motorcycle and text that says "BHZ4644 H24644"May be an image of scooter, motorcycle and text