ஈழத்தமிழர் சாதனை – லண்டன் நகரத்தின் மிக உயரிய விருதைப் பெற்றார் ஆரி கணேசலிங்கம்!
லண்டனில் பிறந்த ஆரி கணேசலிங்கம், தனது சிறு வயதில் குடும்பத்துடன் இலங்கைக்கு இடம் பெயர்ந்தார்.
அங்கு தொடங்கிய உள்நாட்டுப் போரின் துயரமான சூழலில், யாழ்ப்பாணத்தில் இருந்த தங்களது இல்லத்தை இழந்த நிலையில், அவர் மீண்டும் இடம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவைத் தனது இருப்பிடமாகக் கொண்டார். சுமார் மூன்று தசாப்தங்கள் அங்கு வாழ்ந்த அவர், 13 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் லண்டனுக்குக் சென்று குடிபெயர்ந்தார்.
இந்த நீண்ட நெடிய பயணத்திற்குப் பிறகு, கடந்த மாதம் ஆரி கணேசலிங்கம் லண்டன் மாநகரின் Freedom of the City எனும் மிக உயரிய கௌரவத்தைப் பெற்றுள்ளார்.
இந்தச் சிறப்பு குறித்துப் பேசிய அவர், 800 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இந்தச் சிவில் கௌரவத்தைப் பெறுவது தனக்குப் பெருமை அளிப்பதாகவும், தான் நேசிக்கும் நகரத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார்.
லண்டன் நகரின் மிகப் பழமையான கௌரவங்களில் ஒன்றான இது, 800 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வருகிறது. வரலாற்றில், நகரத்தின் எல்லைக்குள் வர்த்தகம் செய்யவும், சொத்துக்களை வைத்திருக்கவும் இது உரிமை வழங்கியது. புளோரன்ஸ் நைட்டிங்கேல், நெல்சன் மண்டேலா மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற உலகத்தலைவர்கள் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.
ஆரி கணேசலிங்கம் தனது இரு தசாப்த கால தொழில் பயணத்தில், பானங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறையில் சிறந்து விளங்கினார். குறிப்பாக, சிவாஸ் ரீகல் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
தற்போது, காபி மூலம் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் வீடற்ற நிலையையும் ஒழிக்கும் Change Please என்ற சமூக நிறுவனத்தில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாகப் பணிபுரிகிறார்.
யாழ்ப்பாணத்திலிருந்து ஆஸ்திரேலியா வழியாக மீண்டும் இலண்டனுக்கு வந்த அவரது வாழ்க்கை, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. சவால்களைக் கடந்து தனது விடாமுயற்சியால் இலண்டன் மாநகரின் மையப்பகுதியான Square Mile ஆரி கணேசலிங்கம் இடம்பிடித்திருப்பது பலருக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

