புதினங்களின் சங்கமம்

அரசியல்வாதிகளால் அலங்கோலப்படப்போகும் அரச அதிகாரிகள்!! மகிந்த விடுத்த எச்சரிக்கை இதோ!!

ஏதேனும் வகையில் ஓர் நிகழ்வு அரசியல்மயமாக்கப்பட்டால் அரசியல்வாதிக்குத் தண்டனை வழங்கப்போவதில்லை. எமது கட்டளைகளை மீறிய அரச அதிகாரிகளே அதற்குப் பொறுப்புக்கூற வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை தொடர்பாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நியமனங்கள் தொடர்பில் எமது அனுமதியைப் பெற வேண்டுமென அனைவருக்கும் கூறியுள்ளோம். அத்துடன் அரச நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் தொடர்பிலும் எம்மிடம் கேட்க வேண்டுமெனக் கூறியுள்ளோம்.

அரசியல் அல்லாத நிகழ்வுகளை எவ்வகையிலும் அரசியலை ஊக்குவிக்காத வகையில் முன்னெடுக்க வேண்டுமென்பதை முக்கியமாகக் கூறியுள்ளோம்.

அரசியல்வாதிகளின் பங்கேற்பை முடிந்தளவு குறைக்க வேண்டும். முக்கியமான நிகழ்வொன்றில் அரசியல்வாதியொருவர் பங்கேற்கின்றார் எனில் ஒரு கட்சியிலிருந்து மாத்திரமின்றி ஏனைய கட்சிகளினதும் அரசியல்வாதிகளை அழைக்கும் சம்பிரதாயம் நாட்டில் காணப்பட வேண்டும்.

அரசியல்வாதியொருவருக்கு மலர் மாலை அணிவிக்கப்படுகின்றது எனில் வருகை தரும் அனைவருக்கும் மலர் மாலை அணிவிக்க வேண்டும் என்பதை நேரடியாகவே நாம் கூறியுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.