புதினங்களின் சங்கமம்

தமிழ் பெண் வைத்தியரை அநுராதபுரத்தில் வைத்து வல்லுறவுக்குட்படுத்திய முன்னாள் இராணுவ வீரருக்கு 6 மாத சிறை! நீதிமன்றில் நடந்தது என்ன?

அநுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது கையடக்க தொலைபேசியை பறித்த குற்றச்சாட்டை மட்டும் ஏற்றுக்கொண்ட முன்னாள் இராணுவ வீரருக்கு ஆறுமாத கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

அநுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்னவால் கடந்த (23) ம் திகதி விதிக்கப்பட்டது.சிறைத்தண்டனையுடன் ரூ. 1500 அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவரிடமிருந்து பறிக்கப்பட்ட கையடக்க தொலைபேசியை மறைப்பதற்கு உதவிய சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரரின் சகோதரி ஷாலிகா ஹர்ஷனி ரத்நாயக்க மற்றும் எச்.கே. மிதிலா சம்பத் குமாரசிங்க ஆகியோருக்கும் தலா ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த முக்கிய சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரரை, கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க தலைமை நீதிபதி முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

கைக்குண்டு வைத்திருந்ததாக இவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு இருப்பதால், கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் சந்தேக நபரை விடுவிக்க உத்தரவிடப்பட்ட நாளிலேயே மீண்டும் விளக்கமறியலில் வைக்க வேண்டியிருந்தது.

இந்தக் குற்றம் தொடர்பான காவல்துறை விசாரணைகளின் பதிவுகள், சட்டமா அதிபரின் அறிவிப்பின் அடிப்படையில், சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக,அநுராதபுரம் தலைமையக காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் துணை ஆய்வாளர் ஏ.சி. தயானந்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.