புதினங்களின் சங்கமம்

கட்டானையில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிப்பு: இளைஞன் பலி!

கட்டானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (09) மாலை வேளையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிப்பில் படுகாயமடைந்த இளைஞன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கட்டானை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் பண்டாரவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார்.

இவர் குறித்த பட்டாசு உற்பத்தி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.  இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த வெடிப்புச் சம்பவம் நிறுவனத்தின் வெளிப்புற கொட்டகையொன்றில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.