யாழில் சித்தப்பாவுடன் கடலுக்குச் சென்ற 17 வயது சந்தோஷ் மரணம்!!
யாழ்ப்பாணத்தில் நேற்று (26) இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை – சாவல்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவரத்தினம் சந்தோஷ் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.இளைஞர் நேற்று (26) அதிகாலை 3:30 மணியளவில் கடற்றொழிலுக்காக தனது சித்தப்பாவுடன் காக்கைதீவு கடற்பகுதி வழியாக மண்டைதீவு கடலுக்குச் சென்றார்.
களங்கண்டி முறையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இளைஞரைக் காணாததால், அவரது சித்தப்பா கடலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டார். அப்போது, இளைஞர் களங்கண்டி தடியைப் பிடித்தபடி மயக்க நிலையில் இருப்பதை அவதானித்தார்.பின்னர், இளைஞரைப் படகில் ஏற்றி குருநகர் இறங்குதுறைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோதிலும், சிறிது நேரத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் ஒழுங்குபடுத்திய நிலையில், உடற்கூறு பரிசோதனைகளில் நீரில் மூழ்கியதால் மரணம் நிகழ்ந்தது உறுதியாகியுள்ளது.

