புதினங்களின் சங்கமம்

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் திடீர் மரணம்; நடந்தது என்ன?!

தென்கிழக்குப் பல்கலைக் கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் 03ம் வருட கற்கை நெறியில் கல்வியை தொடர்ந்து வந்தவர் என்றும் தன்சில்வத்த பூண்டுலோயாவைச் சேர்ந்த ஜெ.துர்கேஸ்வரன் வயது24 எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் இன்று அதிகாலையில் பல்கலைக்கழகத்தில் மயக்கமுற்ற நிலையில் சுயநினைவின்றி காணப்பட்டதனை அவரது சக பீட மாணவர்கள் அவதானித்துள்ளனர். இதனை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இம்மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் இது தொடர்பிலான தகவல் எதனையும் ஊடகங்களுக்கு வழங்க பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மறுப்புத் தெரிவித்துள்ளர்.

இதேவேளை பல்கலைக் கழகத்தினுள் ஊடகவியாலளர்கள் மற்றும் வெளியார் எவரும் உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் நுளைவாயிலில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனையும் அவதானிக்க முடிந்தது.

மரணமடைந்த மாணவனின் பிரேதம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இம்மரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.