வவுனியாவில் இளம் தாய் கௌரியின் கொடூரக் கொலையின் பின்னணி என்ன? (Photos)
நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 11 மற்றும் 5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் கௌரி வயது -32 என பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர்.
இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார். காலையில் அயலவர்கள் வீட்டிற்கு வந்த போது குறித்த பெண்ணின் இரு பிள்ளைகளும், அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கிக்கொண்டிருந்தனர். வீட்டுக்கார பெண்ணை காணவில்லை. எனவே வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்ட சமயத்தில் வீட்டின் ஒர் அறையில் இரத்தம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து வீடு முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் வெளியேயும் தேடிச்செல்லும் போது ஒதுக்குப்புறத்தில் காணப்படும் பாவனையற்ற கிணற்றினை எட்டிப்பார்த்துள்ளனர். வீட்டுக்கார பெண் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். இதனையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸார், சோதனைகளை மேற்கொண்ட போது கிணற்றிற்க்கு செல்லும் பாதையில் கத்தியொன்றை மீட்டுள்ளனர். இதனை ஆதாரமாக வைத்து வெட்டிக்கொலை செய்து விட்டு கிணற்றில் தூக்கி எறிந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கௌரியுடன் அந்தரங்கமாக இருக்க முற்பட்டவர்களாலேயே இக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.